Tuesday, 18 March 2014

ஆரம்பிச்சிட்டாங்கப்பா... அடுத்த சூப்பர் ஸ்டார் சிவகார்த்திகேயனாம்!

எம்ஜிஆர் - சிவாஜி காலத்தில் நடிக்க வந்து, எண்பதுகளில் சூப்பர் ஸ்டார் என அறிவிக்கப்பட்டவர் ரஜினி. அன்றுமுதல் இன்றுவரை அந்த நாற்காலியில் அவர் ஒருவர்தான் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்.


இன்னொன்று சூப்பர் ஸ்டார் என்பது ரஜினிக்கு மட்டுமேயான ஒரு அடைமொழியாகவும் மாறிவிட்டது.


ஆனால் இடையில் பல நடிகர்கள் இரண்டு மூன்று வெற்றிப் படங்கள் கொடுத்ததும் அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தான் என்ற பேச்சு கிளம்பிவிடும். இதை பல நேரங்களில் சம்பந்தப்பட்ட நடிகர்களே கிளப்பிவிடுவதுண்டு.


எண்பதுகளின் ஆரம்பத்தில் கார்த்திக் - பிரபு, இறுதியில் ராமராஜன், ராஜ்கிரண், அடுத்து விஜய் - அஜீத், தனுஷ் - சிம்பு, சூர்யா - விக்ரம் இப்படி பலரும் இந்த சூப்பர் ஸ்டார் அடைமொழிக்குள் திணிக்க முயன்று கடைசியில்.. ம்ஹூம்.. சூப்பர் ஸ்டார் என்ற நிலை காலத்தை தாண்டியது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள்.


இந்த நிலையில் தன்னை ரஜினி ரசிகன் என்று சொல்லிக் கொண்டு (சினிமாவில் அப்படி சொல்லிக் கொள்ளாமல் இருந்தால்தான் ஆச்சர்யம்!) நடிக்க வந்த சிவகார்த்திகேயன், வரிசையாக மூன்று ஹிட்கள் கொடுத்ததும், இப்போது தன்னைத் தானே சூப்பர் ஸ்டார் என நினைத்துக் கொள்ள ஆரம்பித்துள்ளார்.


மான்கராத்தே ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்த அத்தனைப் பேருமே இதனை உணர்ந்ததோடு, வெளிப்படையாக இது ரொம்ப ஓவராச்சே என்று கமெண்டும் அடித்துவிட்டுச் சென்றனர்.


இந்த விழாவில் பேசிய அனைவருமே சிவ கார்த்திகேயனை அடுத்த சூப்பர் ஸ்டார் என்றனர். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயாரோ, ரஜினியையும் சிவகார்த்திகேயனையும் ஒப்பிட்டுப் பேசி, அடுத்த சூப்பர் ஸ்டார் சிவகார்த்தி என்றார்.


இந்த பேச்சுகளால் மந்திரித்துவிட்டதுபோலாகிவிட்ட சிவகார்த்திகேயன், தனது பேச்சில் இதற்கெல்லாம் மறுப்போ, சங்கடப்பட்ட உணர்வையோ காட்டிக் கொள்ளவே இல்லை. மாறாக ரொம்ப மகிழ்ச்சியாக இவற்றை ஏற்றுக் கொண்டார்.

ஆஞ்சநேயா படத்தின்போது அஜீத் கேட்டாரே, 'ஏன் நான் சூப்பர் ஸ்டார் பதவிக்கு ஆசைப்படக் கூடாதா?' என்று. அந்தத் தொனியில்தான் அவர் பேச்சு அமைந்தது!

ரஹ்மானை ஏன் ஓரங்கட்டினார்கள்...? ஹாரிஸ் ஜெயராஜ் முழு விளக்கம்!


கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


கௌதம் சிம்பு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு இசை ரஹ்மான். இதையடுத்து அஜீத் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இதற்கும் ரஹ்மானே இசை என்று முதலில் கூறப்பட்டது.


ஆனால் நேரமின்மை காரணமாக ரஹ்மான் இசையமைக்கவில்லை எனவும் கௌதம் தனது முன்னாள் நண்பர் ஹாரிஸை இந்தப் படத்தில் பயன்படுத்த உள்ளார் எனவும் உறுதிச் செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.


கௌதமின் முதல் படம் மின்னலேயில் அறிமுகமானவர் ஹாரிஸ் ஜெயராஜ். அதன் பிறகு கௌதம் படம் என்றால் இசை ஹாரிஸ் என்பது எழுதப்படாத விதியானது. இந்நிலையில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்காக ரஹ்மானிடம் சென்றார் கௌதம்.


இந்தத் தகவலை அவர் ஹாரிஸிடம் கூறவில்லை. மூன்றாவது நபர் மூலமாகவே ஹாரிஸ் இந்தத் தகவலை அறிந்து கொண்டார். அப்போது இருவருக்குள்ளும் விழுந்த விரிசல் இன்னும் சரியாகாமல் உள்ளது.


பலமுறை கௌதம் பிரிவுக்கு நான்தான் காரணம், மீண்டும் ஹாரிஸுடன் இணைய விரும்புகிறேன் என கூறியும் பிரிந்தவர்கள் கூடுவதற்கான எந்த வழியும் உருவாகவில்லை. இந்நிலையில் நமக்குக் கிடைத்திருக்கும் செய்தி நேர்மறையானது. கௌதம் அஜீத்தை வைத்து இயக்கும் படத்துக்கு இசையமைக்க ஹாரிஸ் இசைந்துள்ளாராம்.


விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ள இந்தப் படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார்.

கார்த்தியின் "காளி" கல்லாகட்டுமா..? புது தகவல்!


சகுனி, அலெக்ஸ்பாண்டியன், அழகுராஜா என்று ஹாட்ரிக் தோல்வியை சந்தித்த கார்த்தி நிதானமாக அடுத்த அடியை எடுத்து வைத்துள்ளார். இந்த மூன்றுப் படங்களுக்குப் பிறகு வெளிவந்த பிரியாணியும் சுமாராகவே போனது.


மூன்று தோல்விகளுக்குப் பின் கார்த்தி ஒப்பந்தமானது அட்டகத்தி படத்தை இயக்கிய ரஞ்சித்தின் காளி படம்.


காளி என்று பெயர் வைத்த படங்கள் அனைத்தும் எதிர்பாராத விபத்துகளை சந்தித்துள்ளதால் காளி என்ற பெயரை மாற்ற முடிவு செய்தனர். ஆனால் இதுவரை பெயர் இறுதி செய்யப்படவில்லை.


விறுவிறுப்பாக தொடங்கிய படப்பிடிப்பு அழகுராஜாவின் தோல்விக்குப் பிறகு சிறிது தடைபட்டது. படத்தின் ஸ்கிரிப்டை மீண்டும் செதுக்கி சீராக்கினர். இப்போது படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.


சமீபத்தில் படத்தின் கிளைமாக்ஸை பெரம்பூரில் படமாக்கினர். இரவு நேரத்தில் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டது.


இந்தப் படத்தில் வடசென்னையைச் சேர்ந்த காளி என்ற இளைஞனாக கார்த்தி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கேதரின் தெரேசா. சந்தோஷ் நாராயணன் இசை.


ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் படத்தை தயாரித்து வருகிறது.

தாணு கையில் "என்னமோ ஏதோ" அதிசயம்!


நேர்எதிர் படத்தை வெளியிட்ட வி கிரியேஷன்ஸ் தாணு கௌதம் கார்த்திக் நடித்திருக்கும் என்னமோ ஏதோ படத்தின் விநியோக உரிமையை வாங்கியுள்ளார்.


தெலுங்கில் ஹிட்டான அலா மொதலயிந்தி படத்தின் தமிழ் தழுவல்தான் என்னமோ ஏதோ.


தெலுங்கில் நானி நடித்த வேடத்தை கௌதம் கார்த்திக்கும், நித்யா மேனன் நடித்த கதாபாத்திரத்தில் ராகுல் ப்‌ரீத் சிங்கும், சினேகா உல்லால் நடித்த வேடத்தில் நிகிஷா படேலும் நடித்துள்ளனர்.


தெலுங்கில் படத்தை இயக்கியவர் நந்தினி ரெட்டி.


என்னமோ ஏதோவை ரவிபிரசாத் புரொடக்சன்ஸ் தயாரிக்க ரவிதியாகராஜன் இயக்கியுள்ளார். கடல் படத்தில் அறிமுகமான கௌதம் கார்த்திக்கின் இரண்டாவது படம் இது.


சமீபத்தில் இந்தப் படம் சென்சாருக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தைப் பார்த்தவர்கள் யு சான்றிதழ் அளித்தனர்.


இந்தப் படத்தின் திரையரங்கு வெளியீட்டு உரிமையை தாணுவின் வி கிரியேஷன்ஸ் வாங்கியுள்ளது.

விஜய்யின் பவர்புல் வில்லன் நீல் நிதின் முகேஷ்...?


விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கும் படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நீல் நிதின் முகேஷ் நடிப்பார் என கூறப்படுகிறது.


இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது. முதலகட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடந்த போது வங்கமொழி நடிகர் டோட்டா ராய் சௌத்ரி அதில் கலந்து கொண்டார். அவர்தான் படத்தின் வில்லன் என்று கூறப்பட்டது.


ஆனால் அந்தச் செய்தியை முருகதாஸ் மறுத்தார். கொல்கத்தா சம்பந்தப்பட்ட காட்சிக்கு ஒரு வங்க நடிகர் தேவைப்பட்டார். அதற்காகவே டோட்டா ராய் சௌத்ரியை பயன்படுத்தினோம். அவர் படத்தின் முக்கிய வில்லன் கிடையாது. பவர்ஃபுல்லான வில்லனை தேடி வருகிறோம் என்று கூறினார். அதையடுத்து விஜய்யின் வில்லன் யார் என்ற கேள்வி மீண்டும் எழுந்தது.


இந்நிலையில் இந்தி நடிகர் நீல் நிதின் முகேஷின் பெயர் அடிபடுகிறது. சமீபத்தில் நீல் நிதின் முகேஷ் சென்னை வந்து முருகதாஸை சந்தித்துவிட்டு சென்றார். அதன் பிறகு விஜய்பட வில்லன் நீல் நிதின் என்று உறுதிபட கூறுகின்றனர்.


இந்தப் படத்தில் விஜய் ஜோ‌டியாக சமந்தா நடிக்க, அனிருத் இசையமைத்து வருகிறார்.

சமுத்திரகனி இயக்கத்தில் - ´´கிட்ணா´´ எக்ஸ்க்ளுசிவ் தகவல்கள்!

சமுத்திரகனி இயக்கத்தில், சமீபத்தில் வெளிவந்த படம் நிமிர்ந்து நில். ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடித்திருந்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அமலாபால், ராகினி ஆகியோர் நடித்திருத்தனர். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


இப்படத்தின் வெற்றி தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது.


 அதில் இயக்குநர் சமுத்திரகனி, ஜெயம் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் பேசிய சமுத்திரகனி, நிமிர்ந்து நில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


நிமிர்ந்து நில் படத்தை பார்த்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், ஐ.பி.எஸ். அதிகாரி வால்டர் தேவாரம் போன்றோர்கள் பாராட்டினார்கள். இதுபோன்ற நேர்மையான அதிகாரிகள் பாராட்டும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.


இந்த சந்தோஷத்துடனேயே எனது அடுத்தப்பட வேலையை ஆரம்பித்துவிட்டேன்.


எனது அடுத்தப்படத்தின் தலைப்பு ´´கிட்ணா´´. கிருஷ்ணா என்பதன் சுருக்கம் தான் கிட்ணா. இப்படத்தின் கதை 1970-களில் ஆரம்பித்து 2002-ல் முடிவது போன்று படமாக்கப்பட உள்ளது.


இப்படத்தில் நானே ஹீரோவாக நடித்து இயக்கவுள்ளேன்.


என்னுடன் அமலாபால் நடிக்கிறார்.


முதன்முறையாக அவர் இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார்.


அமலாபால் 1 வயது முதல் 45 வயது வரையிலான கேரக்டர்களில் நடிக்க இருக்கிறார். நான் 35 வயது முதல் 65 வயது வரையிலான கேரக்டர்களில் நடிக்க இருக்கிறேன்.


படம் முழுக்க காடுகளில் படமாக்கப்பட இருக்கிறது. காடும் காடு சார்ந்த இடமும் தான் எனது படத்தின் கதைக்களம். நிச்சயம் இப்படம் அமலாபாலுக்கு நல்லதொரு பெயரை தரும் என்றார். 

தல – தளபதி ஷாக்! எல்லாம் போச்சி...?

நேற்று முன் தினம் சென்னையில் நடந்த வாயை மூடி பேசவும் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கேயார், 2014ஆம் வருடம் தமிழ் சினிமாவிற்கு நல்ல தொடக்கத்தை கொடுக்கவில்லை.


பல பெரிய ஸ்டார்கள் கடந்த இரண்டு மாதங்களில் ரிலீஸ் ஆகியிருந்தாலும், வசூல் ரீதியாக வெற்றி பெற்று, தயாரிப்பாளருக்கும், விநியோகிஸ்தர்களுக்கு லாபத்தை கொடுத்த படங்கள் என்று பார்த்தால் இரண்டே இரண்டு படங்கள்தான் என்று அதிர்ச்சியுடன் கூறியுள்ளார். அந்த இரண்டு படங்களில் ஒன்று கோலி சோடா, மற்றொன்று தெகிடி.


ஆனால் ஊடகங்களில் விஜய் நடித்த ஜில்லாவும், அஜீத் நடித்த வீரம் படமும் பெரும் வெற்றி பெற்றதாக விளம்பரப்படுத்தின. இந்த வெற்றி உண்மையான வெற்றி அல்ல என்றும், அவருடைய பேச்சில் இருந்து தெரிய வருகிறது.


பசங்க படத்தில் நடித்த சிறுவர்கள் பெற்ற வெற்றியை கூட தல – தளபதி படங்கள் பெறவில்லை என்பதுதான் உண்மை. மேலும் கோலிசோடா அதிகளவான தியேட்டர்களில் 50 நாட்கள் நல்ல வசூலுடன் ஓடியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல தெகிடி படமும் முதல் வார கலெக்ஷனைவிட, இரண்டாவது வார கலெக்ஷன் அதிகமாக இருந்ததாக பாக்ஸ் ஆபீஸ் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

ஹன்சிகா பேசியதை நீங்க கேட்டீங்களா! இது மான் கராத்தே கூத்து!

சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடித்த மான் கராத்தே படத்தின் பாடல் வெளியீடு நேற்று சென்னை சத்யம் சினிமா திரையரங்கில் நடந்தது.


அந்த விழாவில் சிவகார்த்திகேயன், ஹன்சிகா, அனிருத், ஏ.ஆர்.முருகதாஸ், தேவா, ஷங்கர், பிரபு சாலமன், சூரி, கேயார், லதா ரஜினிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்த விழாவில் ஹன்சிகா தமிழில் பேசி ஆடியன்ஸ் அனைவரையும் அசத்தினார். எல்லோருக்கும் வணக்கம் என்று தமிழில் தொடங்கிய ஹன்சிகா, இயக்குனரை பற்றி கூறும்போது கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதை போல இயக்குனர் சிறியவராக இருந்தாலும் பெரிய ஆள் என்று தெரிவித்தார்.


சிவகார்த்திகேயனை எஸ்.கே என்றுதான் தான் கூப்பிடுவதாகவும், அவருடன் நடித்ததில் மிகுந்த சந்தோஷம் என்றும் தெரிவித்தார்.


இறுதியில் மானாட மயிலாட நிகழ்ச்சியின் புகழ் சும்மா கிழி கிழின்னு இந்த படம் வந்துருக்கு என்று ஹன்சிகா சொல்லியபோது ஆடியன்ஸ் மத்தியில் பலத்த கரகோஷம் ஏற்பட்டது.

இவருதேன் அடுத்த சூப்பர் ஸ்டாராம்..?

ஒரு நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்டவர்களை பாராட்டுகிறார்கள் என்றால் அதனை ஒரு மேடை நாகரிகம் என்பார்கள். அது கொஞ்சம் அளவு கடந்து போனால், ஜால்ரா என்பார்கள். அதுவே உதாரணத்துடன் சொன்னால் உண்மை என்பார்கள்.

இன்றைக்கு நடந்த ‘மான் கராத்தே’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் கேயார், மற்றும் செயலாளர் டி.சிவா இருவருமே சிவகார்த்திகேயனை புகழ்ந்து தள்ளிவிட்டார்கள். ஒரு கட்டத்தில் சிவாவே போதுமே சார் என்று சைகையால் கெஞ்சும் அளவுக்கு இவர்களது பேச்சு இருந்தது.

பாடலாசிரியர் அறிவுமதி பேசும்போது, “நான் குவைத்திற்கு சென்றிருக்கும்போது அங்கே ஒரு லேப்டாப்பில் தமிழ்ப் படம் ஓடிக் கொண்டிருந்தது. சுற்றிலும் குழந்தைகள் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் படத்தை நிறுத்துங்கள் என்றேன். ஆனால் குழந்தைகள் அனைவரும் அதனை எதிர்த்தார்கள். அதன் உளவியல் என்ன தெரியுமா..? இன்றைய தினத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரையும் கவர்ந்த நடிகர் சிவகார்த்திகேயன்தான் என்பது எனக்குப் புரிந்தது..” என்றார்.

தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் டி.சிவா பேசும்போது, “சொல்லப் போறது மேடையா இருந்தாலும் மேடைக்காக சொல்லலை. அவருடைய தொடர்ச்சியான 5 படங்கள். அவை கொடுத்த வெற்றி.. அவர் தனது பெர்மார்மென்ஸை வளர்த்துக்கிட்டிருக்குற வேகம். அவரைச் சுற்றியிருக்கிற நண்பர்கள்.. சின்னக் குழந்தை முதல் பெரியவங்கவரைக்கும் அவருக்குக் கிடைச்சிருக்குற ஆடியன்ஸ்.. இதையெல்லாம் வைச்சு சொல்றேன்.. இன்றைய இளையதலைமுறையின் சூப்பர்ஸ்டார் சிவகார்த்திகேயன்தான்..” என்றார்.

கேயார் பேசும்போது, “இன்னிக்கு ஒரு நடிகரோட கால்ஷீட்டுக்கு எத்தனை கோடி வேண்ணாலும் தரேன்னு சொல்லிட்டு தயாரிப்பாளர்கள் ஓடி வர்றாங்கன்னா அது சிவகார்த்திகேயனுக்குத்தான்.. இவரோட அடுத்தடுத்த படங்கள் தொடர்ச்சியாக சூப்பர்ஹிட்டா ஓடி கோடிகள்ல லாபம் சம்பாதிச்சுக் கொடுத்திருப்பதை பார்த்தால் அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தானோன்னு சொல்லத் தோணுது. முன்னாடில்லாம் எம்.ஜி.ஆர். படங்களுக்குத்தான் இப்படியொரு பேச்சு விநியோகஸ்தர்கள், தியேட்டர்கார்ர்கள் மத்தில இருக்கும். இன்னிக்கு சிவகார்த்திகேயன் படமா.. என்ன ஏதுன்னு கேக்காமலேயே படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் ரெடியா இருக்காங்க. அந்த அளவுக்கு இவரோட வளர்ச்சி இருக்கு..” என்றார்.

இப்படி தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் ரெண்டு பேருமே ஏற்றிவிட்டுப் போனார்கள். ஏற்கெனவே சிவகார்த்திகேயன் காசு விஷயத்தில் ரொம்ப கெட்டியாக இருக்கிறார் என்று திரையுலகில் பலமான பேச்சு.. சம்பளமும் வாங்கிக் கொண்டு லாபத்திலும் பங்கு கேட்கும்விதமாக ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறார் என்று முணுமுணுக்கிறார்கள். வருவதை வாங்கிக் கொண்டு நடிக்கும் சாதாரண நடிகரல்ல அவர் என்பது அவரது பேச்சிலும் நன்றாகவே தெரிந்தது.

சிவகார்த்திகேயன் பேசும்போது, “என் படங்களை தைரியமா, நம்பி வந்து பார்க்கலாம். இந்தப் படத்துக்காக பெரிய பட்ஜெட்ல செலவு பண்ணியிருக்கோம். வியாபாரம் கண்டிப்பா பெருசாத்தான் இருக்கும். தியேட்டர்ல டிக்கட் ரேட் அதிகமாகும்போது, அப்படி கொடுத்துவந்து பார்க்கிறவங்களுக்கு… இந்தப் படத்துல ஒவ்வொண்ணும் புதுசா இருக்கும். நான் ஆர்ட்டிஸ்டா..? ஸ்டாரா..? ஹீரோவா..? அதெல்லாம் எனக்குத் தெரியாது, ஸ்கிரீன்ல வரும்போது என்னைப் பார்த்தால் ரசிகர்கள் சந்தோஷப்படணும். இன்னைக்கு இந்த மேடையில இருக்கிறவங்க என்ன நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்காங்களோ, அதை எதிர்காலத்துல ஏற்படுத்தணும்னு ஆசைப்படறேன். இன்னைக்கு ஒரு எக்ஸ்ட்ரா தைரியமும் வந்திருக்கு. இவ்வளவு பேர் இருக்காங்க தட்டிக் கொடுக்கிறதுக்கு… இவ்வளவு பேர் இருக்கீங்க தூக்கி விடுறதுக்குன்னு நினைக்கும்போது, இன்னும் தைரியமான முயற்சிகளை பண்ணலாம்னு கான்பிடன்ஸ் இருக்கு. அதோடு தொடர்ந்து நல்ல படங்கள் பண்ணணும்னும் நினைக்கிறேன்…” என்றார்.

தியேட்டர்களில் பெரிய பட்ஜெட் படங்களின்போதும், பெரிய ஹீரோக்களின் பட ரிலீஸின்போதும் தியேட்டர் கட்டணங்கள் அளவு கடந்து உயர்த்தப்பட்டு ரசிகர்களின் பர்ஸ் காலியாகிறது என்கிற குற்றச்சாட்டு கடந்த சில வருடங்களாகவே உயர்ந்து வருகிறது. இதையெல்லாம் தெரிந்தும் கண்டு கொள்ளாமல்தான் நமது ஹீரோக்கள் கோடிகளை வாங்கி வீட்டுக்குக் கொண்டு செல்கிறார்கள். இதே மனப்பான்மையோடு சிவகார்த்திகேயனும் இருப்பது இவரது பேச்சிலேயே தெரிகிறது..

“தியேட்டர்ல டிக்கட் ரேட் அதிகமாகும்போது, அப்படி கொடுத்துவந்து பார்க்கிறவங்களுக்கு… இந்தப் படத்துல ஒவ்வொண்ணும் புதுசா இருக்கும்.” என்பதெல்லாம் “எவ்வளவுன்னாலும் கொடுத்துப் பாருங்க.. படம் நல்லாயிருக்கும்”னு தனது வெள்ளந்தியான வார்த்தைகளால் ரசிகர்களின் பாக்கெட்டில் உரிமையோடு கையைவிட்டு பணத்தைச் சுடுகிறார் என்றுதான் தோன்றுகிறது..!

கேயார் தெரிவித்த மேடை நாகரிக வார்த்தைகளுக்கு ஏதாவது மறுப்பு தெரிவிப்பாரென்று பார்த்தால் மனிதர் அதைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல், “இன்னைக்கு இந்த மேடையில இருக்கிறவங்க என்ன நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்காங்களோ, அதை எதிர்காலத்துல ஏற்படுத்தணும்னு ஆசைப்படறேன்…” என்றும் சொல்லியிருக்கிறார்.

வருத்தமாகத்தான் இருக்கிறது.. பணத்தினை மட்டுமே மையமாக வைத்து சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கும் சூட்டப்படவில்லை என்பது இங்கே யாருக்கு புரியப் போகிறது..!?

என் மகன் லவ்வை அத்துவிட்டுட்டாரே: புலம்பிய டாடிக்கு இயக்குனர் செம டோஸ்!


என் மகன் காதலை இந்த ஆளு இப்படி அத்துவிட்டுட்டாரே என்று விரல் நடிகரின் தாடிக்கார டாடி தெரிவித்துள்ளாராம்.


விரல் வித்தை நடிகர் தனது காதலியான புஸு புஸு நடிகையை அண்மையில் பிரிந்தார். அவர் பாண்டி இயக்குநர் படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அவரது முன்னாள் காதலியான நயன நடிகை நடிக்கிறார். அவரை நடிக்க அழைத்து வந்ததே இயக்குனர் தான்.


இந்நிலையில் விரல் நடிகரின் தாடிக்கார டாடியும், மம்மியும் தங்கள் மகனின் காதல் முறிவுக்கு பாண்டி இயக்குனர் தான் காரணம் என்றும், அவர் நயனத்தை அழைத்து வந்து மகனின் காதலை அத்துவிட்டுவிட்டதாக சிலரிடம் தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் காத்து வாக்கில் இயக்குனரின் காதுக்கு சென்றுள்ளது.


இதை கேட்ட இயக்குனர் தாடிக்கார டாடிக்கு போன் போட்டு செம டோஸ் விட்டாராம்.

உதயமாகிறது இளையராஜா ரசிகர் மன்றம், பத்திரிகையும் வரப்போகிறது!

இளையராஜாவின் பெயரில் இளையராஜா ரசிகர் மன்றம் தொடங்கயிருக்கிறது. இசைஞானி என்ற பெயரில் வாரப்பத்திரிகையும் வெளிவர உள்ளது.


இளையராஜாவின் கோடிக்கணக்கான ரசிகர்களில் பலர் தனிப்பட்ட முறையில் ஒன்றிணைந்து அவர் பெயரில் மன்றங்களும், பேரவையும் வைத்துள்ளனர். வருடந்தோறும் இளையராஜாவின் ரசிகர்கள் ஒன்றுகூடும் நிகழ்வும் தொடர்ந்து நடந்து வருகிறது.


ஆனால் இளையராஜாவின் சம்மதத்துடன் அவரது பெயரில் ரசிகர் மனற்ம் அமைக்கப்படுவது இதுவே முதல்முறை. இளையராஜாவின் சம்மதத்தடன் தொடங்கப்படும் இந்த அமைப்பானது, இளையராஜாவின் மகன் கார்த்திக்ராஜா தலைமையில், தயாரிப்பாளர் பி.வேலுச்சாமி, இயக்குனர் ரத்னகுமார் ஆகியோரை மேனேஜிங் டிரஸ்டிகளாகக் கொண்டு செயல்படும்.


அரசு அங்கீகாரம் பெற்று செயல்படும் அமைப்பாக இளையராஜா ரசிகர் மன்றம் இருக்கும். இந்த மன்றத்தின் மூலம் சமூக விழிப்புணர்வு, சமூக முன்னேற்றத்துக்கான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுக்கயிருக்கிறாராம் இளையராஜா.


மன்றம் குறித்த அறிவிப்பை ஏப்ரல் 5 மதுரையில் நடக்கயிருக்கும் ராஜாவின் சங்கீதத் திருநாள் இசை நிகழ்ச்சியின் போது வெளியிட உள்ளனர். அன்று இசைஞானி வார இதழையும் அறிமுகப்படுத்த உள்ளனர்.

ஐயா சாமி...! ஆபாசமாக படமெடுக்கவே இல்லை..!

எனது மகளை ஆபாசமாக படமெடுத்தனர் என்று தயாரிப்பாளர் ரவிதேவன் மீது தரப்பட்ட புகாரை அவர் மறுத்துள்ளார்.


சென்னை சாலிக்கிராமம் காவரித் தெருவைச் சேர்ந்தவர் பாக்யஸ்ரீ. துணை நடிகை. அவரை விளம்பரப் படம் ஒன்றில் நடிக்க தயாரிப்பாளர் ரவிதேவன் ஒப்பந்தம் செய்தார். விளம்பரப் படத்தை இயக்கியவர் ராமநாதன்.


ஆண்மைவிருத்தி சம்பந்தப்பட்ட காமசூத்ரா மாத்திரை விளம்பரம் அது. மணப்பெண் கோலத்தில் இருக்கும் பாக்யஸ்ரீ முதலிரவு அறைக்குள் பாலுக்கு பதில் காமசூத்ரா மாத்திரைகள் அடங்கிய சிறிய பெட்டியுடன் செல்வதாக விளம்பரம் எடுக்கப்பட்டது.


படப்பிடிப்பு முடிந்த பிறகு, எனது மகளை வைத்து ஆபாசப் படம் எடுத்தனர் என்று பாக்யஸ்ரீயின் தாயார் நிர்மலா வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் இந்த புகாரை ரவிதேவன் மறுத்தார்.


சம்பந்தப்பட்ட விளம்பரத்தை அவர் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு திரையிட்டு காண்பித்தார். படத்தில் நடிக்க சம்மதித்து, படப்பிடிப்பு நடந்த பிறகு பிரச்சனை செய்வது சரியல்ல என்றவர், பணம் தந்தால் புகாரை வாபஸ் வாங்குவதாக போனில் முகம் தெரியாதவர்கள் மிரட்டுவதாகவும் கூறினார். 

அமர்க்களமாக நடந்த மான் கராத்தே ஆடியோ விழா (படங்கள்)

சும்மா சொல்லவில்லை. படுஅமர்க்களமாகதான் நடந்தது மான் கராத்தே பாடல்கள் வெளியீட்டுவிழா. அரங்கு கொள்ளாத அழைப்பாளர்களுடன் நூற்றுக்கணக்கில் ரசிகர்களும் முட்டி மோதியதில் சில விரும்பத்தகாத சம்பவங்கள். தடித்தடியாக இருந்த பவுன்சர்கள் அழைக்கப்பட்டவர்களையும் அலைக்கழித்தவிதம் பலரை முகம் சுழிக்க வைத்தது.


சிறப்பு அழைப்பாளர் ஷங்கர். நான் அனிருத்தின் ரசிகனாக வந்திருக்கிறேன் என்றவர் அவரின் ஒவ்வொரு படத்தை குறிப்பிட்டு பேசியது, மேடை நாகரிகம் கருதி சொல்லப்பட்ட வெறும் வார்த்தையல்ல என்பதை உணர்த்தியது. நான் காரில் ஏறினால் வணக்கம் சென்னை பாடல்கள்தான் ஒலிக்கும் என்றது அனிருத்தை கள்வெறி கொள்ள வைத்திருக்கும்.



சரியான பாதையில் போய்கிட்டிருக்கீங்க என்று சிவ கார்த்திகேயன் பற்றி சொன்னவர், இப்படியோ போனால் முன்னணி நடிகர்கள் லிஸ்டில் இணைந்து கொள்ளலாம் என்றார்.


இது மட்டும் சிவ கார்த்திகேயனுக்குப் பிடித்திருக்க வாய்ப்பில்லை. விழா நெடுக கும்மியடித்த ரசிகர்களும், சிவ கார்த்திகேயனின் பேச்சும், அவர் ஏற்கனவே முன்னணி லிஸ்டில் இருப்பதை போலதான் இருந்தது.


என்னுடைய படத்தைப் பார்க்க வரும் ரசிகர்கள் ரசித்துப் பார்க்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. நான் இந்த நிலைக்கு வர ரசிகர்கள்தான் காரணம். அவர்கள் என்னை விழாமல் தாங்கிப் பிடிப்பார்கள் என்றார் சிவ கார்த்திகேயன்.


அண்ணாத்தே விரைவில் கட்சி ஆரம்பித்து சிஎம் போஸ்டுக்கு கர்ச்சீஃப் போடுவார் போலத் தோன்றியது. விழா நெடுக வருங்கால சூப்பர்ஸ்டார் என்று மேடையில் இருந்தவர்களும், ரசிகர்களும் கூச்சலிட்டதே அதற்கு சான்று.

நான் வளர்கிறேனே முருகா...


நடிகைகள் கோயிலுக்குச் செல்வதும், பூஜை செய்து யாகம் வளர்ப்பதும் அதிசயமில்லை. அதுபோலதான் லட்சுமி மேனன் பழனிக்கு வந்ததும், தங்கத்தேர் இழுத்ததும்.


மலையாளிகள் என்னதான் தமிழர்களை மட்டம் தட்டினாலும் ஆன்மீக விஷயத்தில் மலையாளி இந்துக்களுக்கு பழனியும், கிறிஸ்தவர்களுக்கு வேளாங்கண்ணியும் தவிர்க்க முடியாத வழிபாட்டுத்தலங்கள். குழந்தைகளின் முதல்முடியை காணிக்கை செலுத்த மலையாளிகள் அதிகம் படையெடுப்பது பழனிக்குதான்.


லட்சுமிமேனன் முதல்முறை பழனி வந்தபோது கும்கியில் நடித்துக் கொண்டிருந்தாராம். அப்போது முருகனிடம் தமிழ், மலையாளத்தில் அதிக படங்கள் செய்ய வேண்டும், செய்கிற படங்கள் வெற்றிபெற வேண்டும், சினிமாவில் நிலையான இடத்தைப் பிடிக்க வேண்டும், எல்லாம் நடந்தால் தங்கத்தேர் இழுக்கிறேன் என்று வேண்டிக் கொண்டாராம்.


முருகன் அருளால் நான் இப்போது வளர்ந்து வருகிறேன். அதனால்தான் தங்கத்தேர் இழுக்க வந்தேன் என்றார் லட்சுமிமேனன்.


தமிழ்க் கடவுளான முருகா... மலையாள நடிகையை வளர வைத்த நீ தமிழ் பெண்களுக்கு சினிமாவில் வாய்ப்பே வழங்குவதில்லையே. முருகா... இதென்ன ஓரவஞ்சனை.

ஷகிலா வேடத்தில் நடிப்பதாக வதந்தி : அஞ்சலி!!

கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை சினிமா படமாகிறது. இதற்கான திரைக்கதையை ஷகிலாவே எழுதி உள்ளார். சினிமா அனுபவங்கள், கதாநாயகியாக ஆசைப்பட்டு கவர்ச்சி நடிகை ஆக்கப்பட்டது, திரைக்குப் பின்னால் தனக்கு நேர்ந்த தொல்லைகள், மலையாள பட உலகினர் பின்னிய சதி வலைகள் அனைத்தையும் ஷகிலா இந்த படம் மூலம் காட்சிப்படுத்த உள்ளார்.


இந்தியில் டேர்டி பிக்சர் பெயரில் படமான சில்க் சுமிதா வாழ்க்கை கதை வெற்றிகரமாக ஓடியதால் இதுவும் ஹிட்டாகும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் ஷகிலாவாக அஞ்சலி நடிக்கப் போவதாக செய்திகள் வந்தன. அஞ்சலி தற்போது மீண்டும் மாயமாகி விட்டதாகவும், அமெரிக்காவில் குடியேறி விட்டார் என்றும் செய்திகள் வந்தன.


இந்த நிலையில் அவர் திடீரென ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது..


நான் ஷகிலா வேடத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வந்துள்ளன. அதில் உண்மை இல்லை. அந்த படத்தில் நடிக்க நான் ஒப்புக்கொள்ளவில்லை அதற்கு பதில் வேறொரு படத்துக்கு ஒப்பந்தமாகியுள்ளேன். அந்த கதை எனக்கு ரொம்ப பிடித்தது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதை. இதுபோன்ற கதையைதான் நான் தேடிக்கொண்டு இருந்தேன்.


இயக்குனர் சொன்னதும் நடிக்க ஒப்புக் கொண்டேன். என் சினிமா வாழ்க்கையில் இது திருப்புமுனை படமாக இருக்கும். எல்லோருக்கும் படம் பிடிக்கும் என்று அஞ்சலி கூறினார்.